Tuesday, July 20, 2010

The Girl with the Dragon Tattoo - சினிமா விமர்சனம் !

Stieg Larsson:  2004 இல் தனது 50 ஆவது வயதில் இறந்து போன ஸ்வீடன் நாட்டு எழுத்தாளர். இவர் எழுதி வைத்துச் சென்ற 3 க்ரைம் நாவல்கள் தான் கடந்த சில வருடங்களாக உலகில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் புத்தகங்கள். Girl with the Dragon Tattoo (2005), Girl who played with Fire (2006), Girl who kicked the Hornet's Nest (2007) ஆகியவை தான் அந்தப்  புத்தகங்கள்.  இன்றும் New York Times டாப் 10 புத்தக வரிசையில் இந்த 3 புத்தகங்களும் இருக்கின்றன! இதில் முதல் புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.  க்ரைம் கதை - கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பிசினஸ் ஆட்களின் ஏமாற்று வேலைகள், நிறைய சஸ்பென்ஸ், கொலைகள், கொஞ்சமே கொஞ்சம் செக்ஸ் என்று நல்ல கலவை. கதையில் ஆசிரியரின் நடையும், தொய்வில்லாமல் கொண்டு சென்ற விதமும் மிகவும் கவர்ந்தன. சில வருடங்களாக க்ரைம் கதைகளில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லாமல் இருந்தும் இந்தக் கதை ஊன்றி படிக்கத் தூண்டியது. புத்தகத்தைக் கிட்டத்தட்ட முடிக்கும் சமயத்தில் இது திரைப்படமாக இங்கு வெளி வருகிறது என்று தெரிந்த உடன் கதையைப் படிப்பதை நிறுத்தி விட்டேன் - முடிவு சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும் என்று. 2009 வருடத்தில் இந்த 3 புத்தகங்களுமே திரைப்படம் ஆக்கப்பட்டு  ஸ்வீடன் மொழியில் வந்து விட்டன. அமெரிக்காவில் முதல் படம் மார்ச் மாதமும் இரண்டாவது படம் போன வாரமும் வந்துள்ளது.

சென்ற வாரம் முதல் படம் -  The Girl with the Dragon Tattoo படத்தை மிக்க ஆர்வத்துடன் DVD-இல் பார்த்தேன். புத்தகத்தை படித்து விட்டு படம் பார்க்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று ஏற்கனவே Harry Potter இல் பட்ட அனுபவம் மனதில் தோன்றி மறைந்தாலும், சரி, இது ஹாலிவுட் காரங்க கையுல மாட்டலையே ஸ்வீடன்காரங்க ஒரு வேளை நல்ல எடுத்திருக்கலாமேன்னு ஒரு நப்பாசை இருந்தது. ஆனா, படம் பார்த்த உடன்  ஏமாற்றம் தான் மிஞ்சியது. இப்போது படம் பார்த்து சில நாட்கள் ஆகிவிட்ட பிறகு, இது மோசமான படம் இல்லை என்று தான் தோணுது. இந்தப் புத்தகத்தை நீங்க படிக்கவில்லையா - கண்டிப்பாகப் படத்தைப் பார்க்கலாம். புத்தகத்தைப் படித்தவர்கள் அல்லது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் - படத்தை விட்டுவிடுங்கள். ஒரு சின்ன கதைச்சுருக்கம் கீழே!

Blomkvist  என்ற பத்திரிக்கைகாரரும் Lisbeth என்ற கம்ப்யூட்டர் ஹாக்கர்/துப்பறியும் பெண்ணும் தான் கதையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.  Blomkvist ஐ ஒரு பெரிய பிசினஸ் குடும்பம் (Vanger group) வேலைக்கு அமர்த்துகிறது - 40 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன அவர்களது குடும்பத்து டீன்-ஏஜ் பெண்ணைக் கண்டுபிடிக்க சொல்லி. சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டதால் எந்த க்ளூ-வும் கிடைக்காமல் திணறும் Blomkvist-க்கு எதிர்பாராத விதமாக Lisbeth-இன் அறிமுகம் கிடைக்கிறது. Lisbeth ஒரு வினோதமான பெண். அவளைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரிவதில்லை. இவர்கள் இருவரும் Vanger குடும்பத்திற்கு சொந்தமான தனித்தீவில் தங்களது துப்பறியும் வேலையை ஆரம்பிக்கிறார்கள் - எதிர்பாராத திருப்பங்கள், திடுக்கிட வைக்கும் சம்பவங்கள் என்று கதை வேகமாக செல்கிறது. முடிவில் காணமல் போன பெண் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற கேள்விக்குக் கிடைக்கும் விடையுடன் கதை முடிகிறது.

ஸ்வீடன் மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு ஆங்கில ஒலியும், ஆங்கில சப்-டைட்டிலும் DVD-இல் இருக்கிறது. படம் நம்மூரு படம் போல 2:30 மணி நேரம் செல்கிறது. கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்து எடுக்கப்பட்டு 100 மில்லியனுக்கு மேல் அள்ளிக்கொண்டிருக்கும் படம். R  - ரேட்டிங் குடுக்கப்பட்டப் படம், எனவே குழந்தைகள் இல்லாமல் பார்ப்பது நல்லது!

Wednesday, July 14, 2010

சிரிப்பா சிரிக்குது!

அண்ணே, இந்த கவர் உள்ளே தான் உங்க செல்போன்-ஐ மறைச்சு வச்சிருக்கிறேன். வரிசையா போன் மேல போன் வந்து தொந்தரவு தாங்க முடியலை. டேய்...அடக்கி வாசிடா. ஆரம்பத்திலயே போட்டுக் குடுத்திராதேடா!





என்னை ஆளை விட்டிருங்கப்பா!! இலங்கைல மொக்கை பிட்ச் போட்டு வந்தவன் போனவன் எல்லாம் 100 போடுவான் - அதுக்கு நான் முக்கி முக்கி 2 நாள் வரிசையா பந்து எறியணுமா? உலகே மாயம், எனக்கு தோள்ல காயம்!




ஒரு வேளை ரெண்டு பேட் வச்சு விளையாடினா ஷார்ட்-பிட்ச் பந்தை நேரா விளையாட முடியுமோ? எதுக்கும் ட்ரை பண்ணிப் பார்ப்போமே!! அட்லீஸ்ட், ஷார்ட்-பிட்ச் பந்தை அடிக்க முடியாட்டியும், ஒரு பேட் வச்சு யுவராஜ் காலை உடைச்சிட்டா போதும். நமக்கு சான்ஸ்!



டேய், அங்கே ரைனா வேற 2 மட்டையைத் தூக்கிட்டு வர்றான்..ஒழுங்கா விளையாடிரு! பேசாம பாஸ்ட் பௌலர் ஆயிருக்கலாம்..அங்கே தான் எவன் வந்தாலும் டீம்ல இடம் கிடைக்குது. ஹ்ம்ம்.

Thursday, July 8, 2010

நன்றி, முரளி!

டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 15-20 வருடங்களில் உலகின் முன்னணி வரிசையில் இருந்த முரளி, ஷேன் வார்னே, கும்ப்ளே ஆகிய 3 சுழல்பந்து வீச்சாளர்களும் சாதித்தவை மிக அதிகம். மூவருமே 600 விக்கெட்களுக்கு மேல் எடுத்தவர்கள் - முரளி 792. இவர்களுக்கு அடுத்த படியாக அதிக விக்கெட் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (355) தான். இதில் இருந்தே உலக கிரிக்கெட்டில் இந்த  மூவரின் ஆதிக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம். பந்து வீசும்போது பிதுங்கி வெளியே வருவது போன்ற கண்கள், பந்து அடிக்கப்பட்டாலும், விக்கெட் எடுத்தாலும் உதடுகளில் தொங்கும் சிரிப்பு போன்றவை முரளியின் அடையாளங்கள். பந்து வீச்சாளர்களில் அதிக பிரச்சனைகளைச் சந்தித்தவரும் கூட. இருந்தாலும், ஒரு நல்ல விளையாட்டு வீரர் ஓய்வு பெறப்போவது கிரிக்கெட் உலகிற்கு இழப்பே!

Tuesday, July 6, 2010

கூட்டாஞ்சோறு - 3

அமெரிக்காவில சுதந்திர தின விடுமுறை 3 நாட்கள் முடிந்து எல்லாரும் ரொம்ப டயர்ட்-ஆ ஆபீஸ்ல ஓய்வெடுக்க போயிருப்போம்! இந்த இடைப்பட்ட காலத்துல நடந்த விஷயங்களின் தொகுப்பு இது!

வருத்தம்: கண்டிப்பாக செல்லவேண்டும் என்று நினைத்தும் கடைசி நேரத்தில் சில சொந்தக் காரணங்களால் கனக்டிகட் FETNA விழாவிற்கு செல்ல இயலாதது வருத்தம் தான். தொலைபேசியில்  அழைத்த பதிவர் சின்னப்பையனுக்கு நன்றி. பழமைபேசியின் பதிவுகளில் இருந்து விவரங்கள் தெரிந்து கொண்டேன். சிறப்பான ஒரு விழாவை நடத்தியதற்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.  
வியப்பு: ஜூன் மாதத்தில் வரிசையாக 3 உலகப் போட்டிகளில் பட்டம் வென்ற சாய்னா நேஹ்வல்! உலக பாட்மிண்டன் தர வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் - முதலாவது இடமும் சாத்தியமே. பிரகாஷ் படுகோனுக்கு பிறகு பாட்மிண்டன் ஆட்டத்தில் இந்தியாவில் மிகவும் சாதித்தவர். எப்படி இவரை இதுவரை நம்ம ஊரு விளம்பர, மாடலிங் உலகம் விட்டுவைத்தது என்று வியந்து கொண்டிருக்கும்போது இன்று காலை நியூஸ் - Saina Nehwal shuttles on the ramp for designer Pallavi Jaipur என்று - சங்கு ஊதிரதீங்கப்பூ!
சிரிப்பு:  கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தமிழ் தொல்லைக்காட்சி நிகழ்சிகளைப் பார்க்கிறேன் - வீட்டில் கொடுத்திருக்கும் கலைஞர், ஜெயா டிவி வழியாக. சில நாட்களுக்கு முன்னாடி ஒரே நாளில்  கலைஞர் செய்திகள்  மற்றும் ஜெயா செய்திகள் பார்த்தேன். முதலில் கலைஞர் - தலைப்புச் செய்தி (வேற என்ன செம்மொழி மாநாடு தான்!) முடிந்ததும் அடுத்த செய்தி - உயர்நீதி மன்றங்களில் தமிழில் வாதாட அனுமதி. வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி! 30 நிமிடங்கள் கழித்து ஜெயாவில் தலைப்புச் செய்தி - தமிழ்நாட்டில் தமிழில் வாதாட முடியாதா - வழக்கறிஞர்கள் போராட்டம். அடுத்த 10 நிமிடத்திற்கு வெவ்வேறு ஊர்களில் நடந்த "போராட்டங்கள்" பற்றிய காட்சிகளும் இருந்தது. நம்மூரு மக்கள் ரொம்ப பாவம் தான்! இதுக்காகத் தான் அவங்களும் செய்திகள் எல்லாம் பார்க்காம சீரியல்-ல மூழ்கிராங்களோ??
குழப்பம் மற்றும் கொலைவெறி: நம்மூருலயும் ராவணன் (ஹிந்தியில) தியேட்டர்ல போடுறாங்களேன்னு நானும் இன்னொரு நண்பரும் இரவு 10 மணிக்காட்சி சென்றோம் ஒரு வாரநாளில். 500 - 600 பேரு அமரக்கூடிய அரங்கில் நானும் அவரும் மட்டும் தான்!! எந்த இடத்தில் உட்கார்ந்தா படம் நல்லாத் தெரியும்னு கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது. படம் நடந்திட்டு இருக்கும்போது தியேட்டர்காரன் ஒருத்தன் வந்து எட்டிப் பார்த்திட்டு வேற போனான். வெளிய நின்னு எல்லாரும் நம்மளைப் பத்தி சொல்லி சொல்லி சிரிச்சிருப்பான்களோ? படம் - கொலைவெறி! முதல் வாரத்துலயே யாரும் பார்க்காத படத்தை விடாப்பிடியாக 2 வாரங்கள், தினமும் 4 காட்சிகள்ன்னு ரிலையன்ஸ் ஓட்டினாங்க. காந்தி கணக்கு காட்டத்தான் இந்த படமா?
 ஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடி!: ஒரு வழியா தோனிக்கு கல்யாணம் ஆயிருச்சாம். முந்தின நாள் நிச்சயதார்த்தம்-ன்னு செய்தி. திடீர்னு அடுத்த நாள் கல்யாணமாம். லக்ஷ்மி ராய், தீபிகா, அசின் மாதிரி ஆட்கள் எல்லாம் இனிமேல் சினிமால கவனத்தை செலுத்தி நமக்கும் நிறைய கலைப்படைப்புகள் கிடைக்கும். 

Tuesday, June 22, 2010

Traffic - நம்ம ஊர் ஸ்டைல்!

மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய மற்றும் சீன நகரங்களில் டிராபிக் என்பது மிகப் பெரிய (சோகமான?) விஷயம். தினம் தினம் நடக்கும் விபத்துக்கள், எரிச்சல்கள், டென்ஷன்கள் எல்லாவற்றையும் அனுபவித்தவர்கள்/அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள் நம்மில் பலர் இருப்போம். அதற்கு எடுத்துக்காட்டாக  மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு YouTube வீடியோக்கள்! இது இரண்டுமே சில வருடங்களுக்கு முன் உள்ளது போல. அப்பவே இப்படின்னா.....!!



Friday, June 18, 2010

இலவச கிரிக்கெட் ஒளிபரப்பு - மீண்டும்!

நாளைக் (சனிக்கிழமை) காலை அமெரிக்க நேரம் 5 மணிக்கு (EST) இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன ஆசியக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. இந்தத் தொடர் முழுவதும் அமெரிக்காவில் ESPN வலையில் இலவசமாக ஒளிபரப்பப் படுகிறது. cricinfo வலையில் இருந்தும் ESPN செல்லலாம். இந்திய-பாகிஸ்தான் போட்டிகள் என்றும்  ஸ்பெஷல் தான்!!

Wednesday, June 9, 2010

கிரிக்கெட்டும் பேஸ்பாலும்!!

எல்லாரும் 2010 உலகக் கோப்பை கால்பந்து பற்றிய காய்ச்சல்ல தகிச்சுக்கிட்டு இருக்கும்போது அதைக் கொஞ்சம் மட்டுப்படுத்த மத்த விளையாட்டுகளைப் பற்றி  ஒரு பதிவு!

கிரிக்கெட்டும் பேஸ்பாலும் ஒண்ணுவிட்ட சகோதரர்கள் மாதிரின்னு இரண்டு விளையாட்டையும் பார்த்த எல்லாருக்கும் தோணியிருக்கும். அது என்னவோ இந்தியால கிரிக்கெட் பிரபலம் அடைஞ்ச அளவு பேஸ்பால் ஆகலை. சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும்போது (எல்லாரும் சின்ன வயசுல தானே ஸ்கூல் படிப்பாங்கன்னுக் கேட்கக்கூடாது!) ஸாப்ட் பால்ன்னு ஒரு குத்துமதிப்பா கிரிக்கெட்டுக்கும் பேஸ்பாலுக்கும் இடைப்பட்ட ஒரு விளையாட்டை ஆடியது நினைவில் உள்ளது. ஆனாலும் கிரிக்கெட் தான் என்னைக்கும் முதல் சாய்ஸ்!

இந்தியாவில் இருந்து இங்க அமெரிக்கா வந்த நிறைய பேருக்கு பேஸ்பால் (MLB) மற்றும் பாஸ்கெட்பால் (NBA) தான் பிடிக்கும். இந்த ஊரு புட்பால், ஐஸ் ஹாக்கி போன்ற விளையாட்டுகள்  ரெண்டாம் பட்சம் தான்னு தோணுது. இந்த பேஸ்பால் விளையாட்டுக்கு கிரிக்கெட் உடன் நிறைய தொடர்பு உண்டு. கிரிக்கெட் எப்படி இங்கிலாந்துல இருந்து மற்ற இடங்களுக்கு பரவியதுன்னு சொல்லுறாங்களோ அதே போல பேஸ்பாலும் அங்கே இருந்து தான் வந்ததுனு அவனுங்க சொல்ல, அமெரிக்காக்காரங்களோ இல்லை, பல இடங்களில் அதே போல விளையாட்டு இருந்தாலும் பேஸ்பால் விளையாடும் முறை அமெரிக்காவில் உருவானது தான்னு சொல்லிட்டு இருந்தாங்க. 1755 ல ஒரு இங்கிலிஷ்காரர் பேஸ்பால் அப்படிங்கற வார்த்தையையே தனது டைரில எழுதியதை வச்சு இப்ப அது தான் பழமை வாய்ந்த பேஸ்பால் குறிப்புன்னு எல்லாரும் ஒத்துகிட்டாங்க. லண்டன்-ல இருக்கிற MCC அருங்காட்சியகத்துல இதைப் பற்றி ஒரு exhibition இப்போது நடந்திட்டு இருக்குதாம். பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் போய் ஒரு எட்டு பார்த்திட்டு வந்து சொல்லுங்க.

மத்தபடி கிரிக்கெட்டுக்கும் பேஸ்பாலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னன்னா, கிரிக்கெட்டுல 11 பேரு, அங்கே 9. பந்தை எரியுறது, மட்டையைக் கொண்டு அடிக்கிறது, பிடிச்சா ஆட்டம் காலின்னு நிறைய ஒற்றுமைகள் உண்டு. நாம சிக்ஸர்ன்னு சொல்லுறதை இங்க ஹோம் ரன்னு சொல்லுவாங்க. நாம 2 innings (இல்லாட்டி 1) ல முடிக்கிற விளையாட்டை இவங்க 9 innings- ல முடிப்பாங்க. நம்ம ஊரு IPL மாதிரி இங்க MLB (Major League Baseball). ஏப்ரல் மாசம் கொஞ்சம் குளிர் குறைய ஆரம்பிச்ச உடன் ஆரம்பிக்கிற சீசன் அக்டோபர் வரை போகும். MLB ல நேஷனல் லீக், அமெரிக்கன் லீக் என்று ரெண்டு பிரிவு. ஒண்ணுல 14 அணிகள், இன்னொண்ணுல 16. ரெண்டு பிரிவுலயும் 100 க்கும் மேற்பட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும். அப்புறம் இரண்டு பிரிவுலயும் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு இடைய உலக சாம்பியன் போட்டிகள் நடக்கும். "உலக" சாம்பியன்ன்னு சொன்னாலும் பங்கேற்கும்  30 அணிகள்ள 29 அமெரிக்காவைச் சேர்ந்ததுதான். (ஹி..ஹி..இன்னொன்னு பக்கத்துக்கு ஊரு டொரோண்டோலர்ந்து!). கிரிக்கெட் எப்படி ஒரு சில நாடுகளில் மட்டும் தான் பிரபலமோ அதே போல பேஸ்பாலும் அமெரிக்கா, கனடாவை விட்டா கியூபா, ஜப்பான், தைவான் போன்ற சில நாடுகளில் மட்டுமே பிரபலம்.

2010 MLB சீசன் ஆரம்பிச்சு தினமும் போட்டிகள் களைகட்டுது. என்ன, தினமும் அதைப் பார்க்கத் தான் நேரம் கிடைக்க மாட்டேங்குது. இதுக்கு நடுவுல NBA இறுதிப் போட்டிகள் வேற (லேகேர்ஸ் - செல்டிக்ஸ்) நடந்திட்டு இருக்குது. அதுக்குள்ள 2010 கால்பந்து உலகக்கோப்பை வேற 2 நாள்-ல ஆரம்பிக்கிறாங்களாம். ஒரு மனுஷனுக்கு எவ்வளவு பிரஷர் பாருங்க. நல்ல வேளை, ஜிம்பாப்வே கூட தோத்து போய் இந்திய கிரிக்கெட் அணி சீக்கிரம் வூட்டுக்கு திரும்பியதில் அந்த பக்கம் கொஞ்சம் ரிலீப்! வாழ்க!! இப்ப, இந்த பேஸ்பால் மற்றும் கிரிக்கெட் பத்தி எல்லாம் தெரிஞ்சு என்ன ஆகப்போகுதுன்னு கேட்கிறவங்க...ஹி ஹி...கம்ப்யூட்டர்-ஐ மூடிட்டுப் போய் புள்ளைங்களைப் படிக்க வையுங்க! :-)