Friday, July 30, 2010

அமெரிக்க ஜோக்குகள்!!

அமெரிக்காவில் ஒரு முடிதிருத்தும் கடைக்கு ஒரு பூக்காரர் சென்றார். வேலை முடிந்ததும் எவ்வளவு என்று கேட்க, அதற்கு முடிதிருத்துபவர், "நான் சேவை செய்கிறேன்..எதற்கும் பணம் கொடுக்க வேண்டாம்" என்று கூறுகிறார். பூக்காரருக்கு ஆச்சரியம். நன்றி தெரிவித்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அடுத்த நாள் முடிதிருத்துபவர் கடையைத் திறக்க வரும்போது வாசலில் அவருக்கு ஒரு நன்றி கார்டும் பெரிய பூங்கொத்தும் இருக்கிறது. இரண்டாவது நாள் அதே கடைக்கு ஒரு சாக்லேட் கடை உரிமையாளர் வருகிறார், அவரும் ஆச்சரியப்பட்டுத்  திரும்புகிறார். மூன்றாம் நாள் முடிதிருத்துபவர் கடையைத் திறக்க வரும்போது வாசலில் அவருக்கு ஒரு நன்றி கார்டும் பெரிய சாக்லேட் பாக்சும் இருக்கிறது. மூன்றாம் நாள் கடைக்கு ஒரு இந்திய சாப்ட்வேர் காரர் வருகிறார், வேலை முடிந்ததும் அவரும் ஆச்சரியப் பட்டு திரும்புகிறார். அதற்கு அடுத்த நாள் கடையை திறக்க வரும்போது முடிதிருத்துபவரால் கடைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை. அந்த ஊரில் இருக்கும் அத்தனை இந்திய சாப்ட்வேர் மக்களும் கடை வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்!
********************************
அமெரிக்காவில் மட்டும் காணக் கிடைப்பவை: 
1. பிட்ஸா டெலிவரிக்காரன் ஆம்புலன்சை விட வேகமாக வீட்டுக்கு  வந்து விடுவான்.
2.  டபுள் சீஸ் பர்கர், லார்ஜ் fry, சாக்லேட் குக்கி உடன் diet கோக் ஆர்டர் செய்பவர்கள்!
3. $ 30000 கொடுத்து வாங்கிய காரை காராஜில் நிறுத்தாமல் வெளியே நிறுத்தி விட்டு உடைந்த பொருட்களைப் போட்டு கராஜை மூடி வைப்பவர்கள்!

********************************
ஒரு நாள் சொர்க்க வாசலில் பெரிய வரிசை.  முதலில் ஒரு சர்தார்ஜி வருகிறார். அவரைப் பார்த்த செயின்ட் பீட்டர், "உன்னைப் பற்றி சொல்லு" என்கிறார். உடனே சர்தார்ஜி, " என் பெயர் குர்தாஸ், நியூயார்க் சிட்டியில்  டாக்ஸி டிரைவராக வேலை செய்தேன்" என்கிறார். செயின்ட் பீட்டரும் தனது லிஸ்டை சரி பார்த்து விட்டு, "சரி இந்த பட்டுத்துணி உடுத்திக் கொண்டு தங்க வாகனத்தில் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்று கூறிகிறார். அடுத்து வரிசையில் ஒரு பாதிரியார். "என் பெயர் ஜோசப், பல இடங்களில் பாதிரியாராக சேவை செய்தவன்" என்கிறார். செயின்ட் பீட்டரும் தனது லிஸ்டை சரி பார்த்துவிட்டு, "இந்த சாதாரண துணியை உடுத்திக் கொண்டு நடந்து சொர்க்கத்துக்குள் செல்லலாம்" என்கிறார். இதைப் பார்த்ததும் செயின்ட் பீட்டரின் உதவியாளருக்கு சந்தேகம் வந்து அவரிடம் எதற்கு இந்த வித்தியாசம் என்று கேட்கிறார். அதற்கு செயின்ட் பீட்டர், "அவரவர் செய்த வேலையைப் பொறுத்து தான் இங்கு பரிசு, அந்த பாதிரியார் பிரசங்கம் செய்த போது முக்கால் வாசி பேரு தூங்கிட்டாங்க. ஆனால், குர்தாஸ் எப்போதெல்லாம் நியூயார்க் சிட்டியில் கார் ஓட்டினாரோ அப்போதெல்லம் கார் உள்ளே இருந்தவர்கள், வெளியே நடந்தவர்கள் எல்லாரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடவுளை மட்டும் நினைத்தார்கள்" என்றார்! 

********************************
"பஞ்ச் பஞ்சாமிர்தம்":
சிகரெட்: காகிதத்தில் சுத்தப்பட்ட புகையிலையின் ஒரு முனையில் நெருப்பு, மறுமுனையில் முட்டாள்.
********************************

Tuesday, July 27, 2010

எந்திரனும் வோல்வேரினும்!!

எந்திரன் படப் பாடல்கள் இன்னும் சில நாட்களில் வரவிருப்பதும் அந்தப் படப் போஸ்டரும் தான் இன்றைய talk of the town (கோடம்பாக்கம் டவுன்?) போல இருக்கிறது. போஸ்டரில் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்த உடன் எனக்கு X-men Wolverin படத்தின் Hugh Jackman கெட்-அப் தான் சட்டென்று ஞாபகத்துக்கு வருது!! என்ன ரஜினிக்கு தலைல கொஞ்சம் காரக் கொழம்பு எக்ஸ்ட்ரா கொட்டிருக்காங்களோ?? இரண்டு படங்களும் இங்கே!!

Thursday, July 22, 2010

அமெரிக்காவைப் பிடித்து ஆட்டும் புது பேஷன் - ஸில்லி பேண்ட்ஸ் !!


அமெரிக்காவில் இருக்கும் பெற்றோர்கள் யாரும் இந்த "வியாதி"யில் இருந்து தப்பித்து இருக்க முடியாது - அது தான் Silly Bandz!! (இங்கே சென்று பார்க்கலாம்!). 2, 3 வயது குழந்தைகளில் இருந்து டீன்-ஏஜர்கள் வரை அனைவரது கைகளிலும் மாரியாத்தா காப்பு கட்டியது போல இப்போது ஸில்லி பேன்ட்ஸ்.  ஒண்ணும் புது விஷயம் எல்லாம் இல்லை. சாதாரண சிலிகான் ரப்பர் பேண்ட்-ஐத் தான் வெவ்வேறு டிசைன்களில் செய்து விக்கிறார்கள். விலங்குகள், கடல் உயிரினங்கள், ABCD மாதிரி டிசைன், சதுரம், முக்கோணம் போன்ற டிசைன்கள் என்று பலவிதம். அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு சென்ற ஒரு வியாபாரக் குழு அங்கே இதே போல  ரப்பர் பேண்ட்-ஐப் பார்த்து இந்த ஐடியா நல்லா இருக்கே என்று இங்கு வந்து செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பெரிய பிசினஸ் பிளான் எல்லாம் எதுவுமில்லாமல் சில கடைகளில் 2008 இல் கிடைக்க ஆரம்பித்தது சென்ற வருட இறுதியில் அமெரிக்காவில் அதிகமாக விற்கும் பொருட்களில் ஒன்றாக ஆகிவிட்டது. திடீர் என்று எதிர்பாராமல் ஏகப்பட்ட டிமாண்டு! பள்ளிகளில் குழந்தைகள் வெவ்வேறு டிசைன்களை மாற்றிக்கொள்வதும், அதே போல்  டிசைன் தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிப்பதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. இதனால் வெறுத்து போன சில பள்ளிகள் silly bandz-க்கு தடையே விதித்து விட்டன. இன்னும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைகளைச் செய்யும் குழந்தைகளுக்கு இதையே பரிசாகக் குடுக்க ஆரம்பித்தனர். இன்னும் silly bandz பற்றிய விவாதங்கள் பள்ளிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போ இங்க கோடை விடுமுறைங்கறதால கொஞ்சம் பள்ளிகளுக்கு மூச்சு விட சந்தர்ப்பம். அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கும்போது மீண்டும் இந்த விஷயம் செய்திகளில் அடிபடும்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த கம்பெனி ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யவில்லையாம். அனைத்து விளம்பரங்களும் சோசியல் நெட்வொர்க் தளங்களான facebook, twitter வழியாக மட்டுமே செய்யப்பட்டிருகின்றன. எதேச்சையாக ஆரம்பித்த ஒரு சிறிய ஐடியா இன்றைக்கு அந்த கம்பெனிக்கு மில்லியன்களை அள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது! 24 பேண்ட்கள் கொண்ட ஒரு பாக்கெட் விலை இங்கே 5 டாலர்கள், விலை அதிகம் தான். ஸில்லி என்று பெயர் வைத்தது இதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அப்பா அம்மாக்களைக் குறித்து தானோ? நாங்களும் எங்க வீட்டுல பணம் செலவு பண்ணி இந்த silly bandz காய்ச்சலில் இருக்கிறோம் - அந்த ஆதங்கத்தில் தோன்றிய பதிவு! மேலும், இன்றைய CNN செய்திகளில் இதைப் பற்றிய ஒரு செய்தியைப் பார்த்த உடன் எழுதியது. அந்த CNN வீடியோ பார்க்க நினைப்பவர்கள் இங்கே செல்லவும்!

Tuesday, July 20, 2010

The Girl with the Dragon Tattoo - சினிமா விமர்சனம் !

Stieg Larsson:  2004 இல் தனது 50 ஆவது வயதில் இறந்து போன ஸ்வீடன் நாட்டு எழுத்தாளர். இவர் எழுதி வைத்துச் சென்ற 3 க்ரைம் நாவல்கள் தான் கடந்த சில வருடங்களாக உலகில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் புத்தகங்கள். Girl with the Dragon Tattoo (2005), Girl who played with Fire (2006), Girl who kicked the Hornet's Nest (2007) ஆகியவை தான் அந்தப்  புத்தகங்கள்.  இன்றும் New York Times டாப் 10 புத்தக வரிசையில் இந்த 3 புத்தகங்களும் இருக்கின்றன! இதில் முதல் புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.  க்ரைம் கதை - கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பிசினஸ் ஆட்களின் ஏமாற்று வேலைகள், நிறைய சஸ்பென்ஸ், கொலைகள், கொஞ்சமே கொஞ்சம் செக்ஸ் என்று நல்ல கலவை. கதையில் ஆசிரியரின் நடையும், தொய்வில்லாமல் கொண்டு சென்ற விதமும் மிகவும் கவர்ந்தன. சில வருடங்களாக க்ரைம் கதைகளில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லாமல் இருந்தும் இந்தக் கதை ஊன்றி படிக்கத் தூண்டியது. புத்தகத்தைக் கிட்டத்தட்ட முடிக்கும் சமயத்தில் இது திரைப்படமாக இங்கு வெளி வருகிறது என்று தெரிந்த உடன் கதையைப் படிப்பதை நிறுத்தி விட்டேன் - முடிவு சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும் என்று. 2009 வருடத்தில் இந்த 3 புத்தகங்களுமே திரைப்படம் ஆக்கப்பட்டு  ஸ்வீடன் மொழியில் வந்து விட்டன. அமெரிக்காவில் முதல் படம் மார்ச் மாதமும் இரண்டாவது படம் போன வாரமும் வந்துள்ளது.

சென்ற வாரம் முதல் படம் -  The Girl with the Dragon Tattoo படத்தை மிக்க ஆர்வத்துடன் DVD-இல் பார்த்தேன். புத்தகத்தை படித்து விட்டு படம் பார்க்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று ஏற்கனவே Harry Potter இல் பட்ட அனுபவம் மனதில் தோன்றி மறைந்தாலும், சரி, இது ஹாலிவுட் காரங்க கையுல மாட்டலையே ஸ்வீடன்காரங்க ஒரு வேளை நல்ல எடுத்திருக்கலாமேன்னு ஒரு நப்பாசை இருந்தது. ஆனா, படம் பார்த்த உடன்  ஏமாற்றம் தான் மிஞ்சியது. இப்போது படம் பார்த்து சில நாட்கள் ஆகிவிட்ட பிறகு, இது மோசமான படம் இல்லை என்று தான் தோணுது. இந்தப் புத்தகத்தை நீங்க படிக்கவில்லையா - கண்டிப்பாகப் படத்தைப் பார்க்கலாம். புத்தகத்தைப் படித்தவர்கள் அல்லது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் - படத்தை விட்டுவிடுங்கள். ஒரு சின்ன கதைச்சுருக்கம் கீழே!

Blomkvist  என்ற பத்திரிக்கைகாரரும் Lisbeth என்ற கம்ப்யூட்டர் ஹாக்கர்/துப்பறியும் பெண்ணும் தான் கதையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.  Blomkvist ஐ ஒரு பெரிய பிசினஸ் குடும்பம் (Vanger group) வேலைக்கு அமர்த்துகிறது - 40 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன அவர்களது குடும்பத்து டீன்-ஏஜ் பெண்ணைக் கண்டுபிடிக்க சொல்லி. சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டதால் எந்த க்ளூ-வும் கிடைக்காமல் திணறும் Blomkvist-க்கு எதிர்பாராத விதமாக Lisbeth-இன் அறிமுகம் கிடைக்கிறது. Lisbeth ஒரு வினோதமான பெண். அவளைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரிவதில்லை. இவர்கள் இருவரும் Vanger குடும்பத்திற்கு சொந்தமான தனித்தீவில் தங்களது துப்பறியும் வேலையை ஆரம்பிக்கிறார்கள் - எதிர்பாராத திருப்பங்கள், திடுக்கிட வைக்கும் சம்பவங்கள் என்று கதை வேகமாக செல்கிறது. முடிவில் காணமல் போன பெண் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற கேள்விக்குக் கிடைக்கும் விடையுடன் கதை முடிகிறது.

ஸ்வீடன் மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு ஆங்கில ஒலியும், ஆங்கில சப்-டைட்டிலும் DVD-இல் இருக்கிறது. படம் நம்மூரு படம் போல 2:30 மணி நேரம் செல்கிறது. கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்து எடுக்கப்பட்டு 100 மில்லியனுக்கு மேல் அள்ளிக்கொண்டிருக்கும் படம். R  - ரேட்டிங் குடுக்கப்பட்டப் படம், எனவே குழந்தைகள் இல்லாமல் பார்ப்பது நல்லது!

Wednesday, July 14, 2010

சிரிப்பா சிரிக்குது!

அண்ணே, இந்த கவர் உள்ளே தான் உங்க செல்போன்-ஐ மறைச்சு வச்சிருக்கிறேன். வரிசையா போன் மேல போன் வந்து தொந்தரவு தாங்க முடியலை. டேய்...அடக்கி வாசிடா. ஆரம்பத்திலயே போட்டுக் குடுத்திராதேடா!





என்னை ஆளை விட்டிருங்கப்பா!! இலங்கைல மொக்கை பிட்ச் போட்டு வந்தவன் போனவன் எல்லாம் 100 போடுவான் - அதுக்கு நான் முக்கி முக்கி 2 நாள் வரிசையா பந்து எறியணுமா? உலகே மாயம், எனக்கு தோள்ல காயம்!




ஒரு வேளை ரெண்டு பேட் வச்சு விளையாடினா ஷார்ட்-பிட்ச் பந்தை நேரா விளையாட முடியுமோ? எதுக்கும் ட்ரை பண்ணிப் பார்ப்போமே!! அட்லீஸ்ட், ஷார்ட்-பிட்ச் பந்தை அடிக்க முடியாட்டியும், ஒரு பேட் வச்சு யுவராஜ் காலை உடைச்சிட்டா போதும். நமக்கு சான்ஸ்!



டேய், அங்கே ரைனா வேற 2 மட்டையைத் தூக்கிட்டு வர்றான்..ஒழுங்கா விளையாடிரு! பேசாம பாஸ்ட் பௌலர் ஆயிருக்கலாம்..அங்கே தான் எவன் வந்தாலும் டீம்ல இடம் கிடைக்குது. ஹ்ம்ம்.

Thursday, July 8, 2010

நன்றி, முரளி!

டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 15-20 வருடங்களில் உலகின் முன்னணி வரிசையில் இருந்த முரளி, ஷேன் வார்னே, கும்ப்ளே ஆகிய 3 சுழல்பந்து வீச்சாளர்களும் சாதித்தவை மிக அதிகம். மூவருமே 600 விக்கெட்களுக்கு மேல் எடுத்தவர்கள் - முரளி 792. இவர்களுக்கு அடுத்த படியாக அதிக விக்கெட் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (355) தான். இதில் இருந்தே உலக கிரிக்கெட்டில் இந்த  மூவரின் ஆதிக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம். பந்து வீசும்போது பிதுங்கி வெளியே வருவது போன்ற கண்கள், பந்து அடிக்கப்பட்டாலும், விக்கெட் எடுத்தாலும் உதடுகளில் தொங்கும் சிரிப்பு போன்றவை முரளியின் அடையாளங்கள். பந்து வீச்சாளர்களில் அதிக பிரச்சனைகளைச் சந்தித்தவரும் கூட. இருந்தாலும், ஒரு நல்ல விளையாட்டு வீரர் ஓய்வு பெறப்போவது கிரிக்கெட் உலகிற்கு இழப்பே!

Tuesday, July 6, 2010

கூட்டாஞ்சோறு - 3

அமெரிக்காவில சுதந்திர தின விடுமுறை 3 நாட்கள் முடிந்து எல்லாரும் ரொம்ப டயர்ட்-ஆ ஆபீஸ்ல ஓய்வெடுக்க போயிருப்போம்! இந்த இடைப்பட்ட காலத்துல நடந்த விஷயங்களின் தொகுப்பு இது!

வருத்தம்: கண்டிப்பாக செல்லவேண்டும் என்று நினைத்தும் கடைசி நேரத்தில் சில சொந்தக் காரணங்களால் கனக்டிகட் FETNA விழாவிற்கு செல்ல இயலாதது வருத்தம் தான். தொலைபேசியில்  அழைத்த பதிவர் சின்னப்பையனுக்கு நன்றி. பழமைபேசியின் பதிவுகளில் இருந்து விவரங்கள் தெரிந்து கொண்டேன். சிறப்பான ஒரு விழாவை நடத்தியதற்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.  
வியப்பு: ஜூன் மாதத்தில் வரிசையாக 3 உலகப் போட்டிகளில் பட்டம் வென்ற சாய்னா நேஹ்வல்! உலக பாட்மிண்டன் தர வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் - முதலாவது இடமும் சாத்தியமே. பிரகாஷ் படுகோனுக்கு பிறகு பாட்மிண்டன் ஆட்டத்தில் இந்தியாவில் மிகவும் சாதித்தவர். எப்படி இவரை இதுவரை நம்ம ஊரு விளம்பர, மாடலிங் உலகம் விட்டுவைத்தது என்று வியந்து கொண்டிருக்கும்போது இன்று காலை நியூஸ் - Saina Nehwal shuttles on the ramp for designer Pallavi Jaipur என்று - சங்கு ஊதிரதீங்கப்பூ!
சிரிப்பு:  கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தமிழ் தொல்லைக்காட்சி நிகழ்சிகளைப் பார்க்கிறேன் - வீட்டில் கொடுத்திருக்கும் கலைஞர், ஜெயா டிவி வழியாக. சில நாட்களுக்கு முன்னாடி ஒரே நாளில்  கலைஞர் செய்திகள்  மற்றும் ஜெயா செய்திகள் பார்த்தேன். முதலில் கலைஞர் - தலைப்புச் செய்தி (வேற என்ன செம்மொழி மாநாடு தான்!) முடிந்ததும் அடுத்த செய்தி - உயர்நீதி மன்றங்களில் தமிழில் வாதாட அனுமதி. வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி! 30 நிமிடங்கள் கழித்து ஜெயாவில் தலைப்புச் செய்தி - தமிழ்நாட்டில் தமிழில் வாதாட முடியாதா - வழக்கறிஞர்கள் போராட்டம். அடுத்த 10 நிமிடத்திற்கு வெவ்வேறு ஊர்களில் நடந்த "போராட்டங்கள்" பற்றிய காட்சிகளும் இருந்தது. நம்மூரு மக்கள் ரொம்ப பாவம் தான்! இதுக்காகத் தான் அவங்களும் செய்திகள் எல்லாம் பார்க்காம சீரியல்-ல மூழ்கிராங்களோ??
குழப்பம் மற்றும் கொலைவெறி: நம்மூருலயும் ராவணன் (ஹிந்தியில) தியேட்டர்ல போடுறாங்களேன்னு நானும் இன்னொரு நண்பரும் இரவு 10 மணிக்காட்சி சென்றோம் ஒரு வாரநாளில். 500 - 600 பேரு அமரக்கூடிய அரங்கில் நானும் அவரும் மட்டும் தான்!! எந்த இடத்தில் உட்கார்ந்தா படம் நல்லாத் தெரியும்னு கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது. படம் நடந்திட்டு இருக்கும்போது தியேட்டர்காரன் ஒருத்தன் வந்து எட்டிப் பார்த்திட்டு வேற போனான். வெளிய நின்னு எல்லாரும் நம்மளைப் பத்தி சொல்லி சொல்லி சிரிச்சிருப்பான்களோ? படம் - கொலைவெறி! முதல் வாரத்துலயே யாரும் பார்க்காத படத்தை விடாப்பிடியாக 2 வாரங்கள், தினமும் 4 காட்சிகள்ன்னு ரிலையன்ஸ் ஓட்டினாங்க. காந்தி கணக்கு காட்டத்தான் இந்த படமா?
 ஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடி!: ஒரு வழியா தோனிக்கு கல்யாணம் ஆயிருச்சாம். முந்தின நாள் நிச்சயதார்த்தம்-ன்னு செய்தி. திடீர்னு அடுத்த நாள் கல்யாணமாம். லக்ஷ்மி ராய், தீபிகா, அசின் மாதிரி ஆட்கள் எல்லாம் இனிமேல் சினிமால கவனத்தை செலுத்தி நமக்கும் நிறைய கலைப்படைப்புகள் கிடைக்கும்.