Sunday, October 3, 2010

வண்டி கட்டிட்டு போய் எந்திரன்!

எந்திரன் - அனைத்து தமிழ் புத்தகங்களிலும் ப்லாக்க்களிலும் துவைத்து தொங்க போட்டுகொண்டு இருக்கப்படும் வார்த்தை. இங்க நம்ம ஊரில் பொட்டி கிடைக்க வில்லை என்று ரிலீஸ் சிறிது தாமதம் ஆகுவது போல தெரிந்த உடன் பக்கத்தில் எந்த ஊரில் ரிலீஸ் என்று தேடினால் இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் இருக்கும் ராச்சஸ்டரில் தினமும் 3 காட்சிகளாக ஒரு வாரத்திற்கு ஓடுவதாக கண்டுபிடித்தோம். நம்ம ஊரு படங்கள், அதுவும் கிட்டத்தட்ட 3 மணிநேர படங்கள் எல்லாம் குழந்தைகள் உட்கார்ந்து பார்ப்பது கஷ்டம் என்பதால் நண்பர்கள் (bachelor party மாதிரி!)  குழுவாக  6 பேர் சனிக்கிழமை மதியம் 4:35 மணி காட்சிக்கு கிளம்பினோம். நண்பர் தனது வண்டியை எந்திரன் போஸ்டர் உடன் தயார் செய்து வைத்திருந்தார். எந்திரன் பாடல்கள், எந்திரன் போஸ்டர், சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் போட்ட அலங்காரங்கள் என்று ஒரு மூட் உடன் தான் கிளம்பினோம்.

4 மணிக்கு தியேட்டர் சென்று அடைந்தால் சுத்தமாக கூட்டமே இல்லை. வெளியே எந்திரன் படப்பெயரை பார்த்த உடன் கொஞ்சம் நிம்மதி. சரியான இடத்திற்குத் தான் வந்திருகோம்ன்னு. ஆன்-லைன் டிக்கெட்டை ($20 ஒரு டிக்கட்) குடுத்து டிக்கட் வாங்கி விட்டு வரிசையில் நின்றால் நமக்கு முன்னாடி நின்னுகிட்டு இருந்த கும்பலும் பின்னாடி நின்ன கும்பலும் தெலுங்குல பேசிக்கிட்டு இருந்த உடன் எல்லாருக்கும் சந்தேகம். பார்க்க வந்தது எந்திரனா இல்லை எந்திருடுவான்னு. தியேட்டர்காரன்கிட்ட கேட்டு என்ன ஆகப்போகுது - அவனுக்கு தமிழும் ஒன்னுதான், தெலுங்குவும் ஒன்னுதானே. சரின்னு போன்ல ஆன்-லைன் டிக்கெட் புக் பண்ணிய விவரத்தைப் பார்த்து அதில் தமிழ் தான் என்று தெரிந்த  உடன் தான் கொஞ்சம் நிம்மதி.

கிட்டத்தட்ட 500 பேரு உட்கார்ற தியேட்டர்ல மொத்தமே 50 பேரு தான் இருந்திருப்போம். (ராவணன் ஹிந்தி படம் பார்த்ததுக்கு இது பரவாயில்லை - அதுல தியேட்டர்லயே நாங்க ரெண்டு பேரு தான் இருந்தோம்!). சனிக்கிழமை மதியக் காட்சி என்பதால் நல்ல கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்து போய் பெரிய அல்வா!   படம் - நல்ல படம், ஆனா ரஜினி ஸ்டைல், பஞ்ச் எல்லாம் மிஸ்ஸிங். ரஜினிக்கும் ஐஸ்வார்யாவுக்கும் முகத்தில் வயசு தெரிகிறது என்பது உண்மை!! நல்ல ஜனரஞ்சகமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை?! படம் முடிந்ததும் ராச்சஸ்ட்டரில் உள்ள மைசூர் உட்லண்ட்ஸ் உணவகத்தில் நல்ல உணவிற்கு பிறகு வீடு திரும்பினோம்!! படங்கள் கீழே.

அமெரிக்க box office இல் எந்திரன் முதல் இடம் என்று இன்று நம்ம ஊரு செய்திகளில் கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தான் அமெரிக்காவில் இந்த வார இறுதிக்கான box office நிலவரம் ..இதுல எந்திரன் எங்க இருக்குனு நீங்களே தேடிக்கோங்க..BOX ஆபீஸ். எப்படி எல்லாம் படத்தை விளம்பரம் பண்ணுறாங்க..பெருமை பீத்தக்களையங்கன்னா இது தானோ?

Friday, September 10, 2010

நாளை, செப்டம்பர் 11, 2010!!!

செப்டம்பர் 11 என்பது அமெரிக்க வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலயே ஒரு முக்கிய தினம் ஆகிவிட்டது, 2001 வருடத்திற்குப் பின். நாளை மீண்டும் ஒரு செப்டம்பர் 11. செப்டம்பர் 11 இங்கு பல குடும்பங்களுக்கு உணர்ச்சிபூர்வமான நாள். இந்த  வருடம் முந்திய சில வருடங்களை விட கொஞ்சம் சூடு அதிகம் தான் என்று படுகிறது. அதற்கு காரணங்கள் இரண்டு: முதலில் இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்திற்கு அருகில் வரப்போவதாக சொல்லப் படும் இஸ்லாமிக் சென்ட்டர். இதற்கு பலர்  எதிர்ப்பு, பலர் ஆதரவு. அமெரிக்காவில் இது ஒரு அரசியல் விஷயமாகவே கடந்த சில வாரங்களில் உருவெடுத்து விட்டது. இரண்டாவது, செப்டம்பர் 11 அன்று இங்கு ப்ளோரிடாவில் குரானை எரிப்போம், வாருங்கள் என்று ஒரு பாதிரியார் (Rev. Terry Jones) விடுத்த அழைப்பு. இதில் இந்த வருடம் செப்டம்பர் 11 அன்று தான் ரமதானும்.   ஜோன்ஸ்க்கு உலக அளவில் பலர் கண்டனம் தெரிவித்ததும் நேற்று குரானை எரிப்பதை கைவிட்டுவிட்டேன் என்று ஒரு தொலைக்காட்சியில் கூறியவர், இன்று இன்னும் அதைப்பத்தி யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி பல்டி அடிக்கிறார். 

எது எப்படியோ நாளை விநாயகர் சதுர்த்தி, ரமதான், செப்டம்பர் 11 மூன்றும் ஒன்றாக வருகிறது. அவைகளை நினைவூட்ட சில படங்கள் கீழே!! (அனைத்தும் கூகிள்-இல் இருந்து எடுத்தது தான்!). கொண்டாடுபவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். துக்கம் அனுஷ்டிப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இரண்டுமே செய்யப் போவதில்லை என்று கூறுபவர்களுக்கு இருக்கவே இருக்கு நம்ம தொலைக்காட்சிகள். கலைஞர் டிவியில் மட்டும் நாளை நான்கு படங்களாம் - அதுக்கே கிட்டத்தட்ட 16 மணி நேரங்கள் ஆகாது?. தூங்க, மற்றவைக்கு 8 மணி நேரம் - 24 மணி நேரம் முடிந்தது. அப்புறம் புள்ளையாராவது, செப்டம்பர் 11 ஆவது!!. நன்றி!



Monday, August 23, 2010

மலர்களே, மலர்களே!!

புகைப்படம் எடுப்பதில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு, பல வருடங்களாகவே!  சில வருடங்களாக டிஜிட்டல் காமெராக்கள் வந்ததும் புகைப்படங்களை வகைப்படுத்தி வைப்பது எளிதாகிவிட்டது. அப்படி சில வருடங்களாக சேமித்து வைத்த பூக்களின் படங்கள். பெரும்பாலும் அமெரிக்காவில் எடுத்தது, சிலது  இந்தியாவில், சிலது கனடாவில், சிலது  இத்தாலியில்.  இன்டர்நெட் வேக வசதிக்காக இங்கே முழு resolution-இல் படங்களைப் போடவில்லை.  ஏதாவது புகைப்படத்தை வேறு எங்காவது உபயோகிக்க வேண்டுமானால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு சில புகைப்படங்களை கீழேக் குடுத்துள்ளேன்...மற்றவை இந்த பக்கத்தில். என்சாய்!!!!! பிடித்திருந்தால் கண்டிப்பாக பின்னூட்டதிலும் ஓட்டிலும் பதிவு செய்யவும். இன்னும் பல ஊர்களின் சுற்றுலாப் படங்கள், இயற்கைப் படங்கள் என்று உங்களை திணற அடித்து விடலாம்!

Thursday, August 19, 2010

கூட்டாஞ்சோறு - 4

இந்த மாத துவக்கத்தில் இருந்தே கொஞ்ச நாள் காணாமப் போக வேண்டியதாகி விட்டது. குடும்பத்துடன் 6 நாட்கள் நியூ யார்க் சிட்டி, நியூ ஜெர்சி, வாஷிங்டன் போன்ற ஊர் சுற்றிப் பார்க்க சென்றது தான் முக்கிய காரணம். குழந்தைகள் மற்றும் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் அப்பா அம்மா என்று  கூட்டமாப் போனதால  நிறைய வேலைகள். அந்த சுற்றுப் பயணத்தைப் பற்றி புகைப்படங்களுடன் கூடிய விரைவில் எழுதுகிறேன். நாம கொஞ்ச நாள் பிஸியா இருந்திட்டு வந்தா நிறைய விஷயங்கள் நடந்து போச்சுது போல...(ஹி ஹி..ஒண்ணும் நடக்கலைங்கிறதை வெளிய சொல்ல முடியுமா?!).
*****************
ரொம்ப வருஷம் கழிச்சு சுதந்திர தின சிறப்பு கொண்டாட்டங்கள் கலைஞர் மற்றும் ஜெயா டிவில பார்க்க முடிஞ்சுது. கலைஞர் டிவில லியோனியின் பட்டிமன்றம் காலையில. 30 நிமிஷம் விளம்பரம், 4 பேச்சாளர்களுக்கும் ஆளுக்கு  சில நிமிடங்கள், லியோனி ஒரு 10 நிமிடங்கள் - பட்டிமன்றம் முடிந்தது. யாரு சொல்ல வந்த விஷயமுமே சொல்லி முடிக்காத மாதிரி இருந்தது. அவங்களுக்கும் ஸ்லாட்டை நிரப்பனுமே!! ஜெயா டிவில காலையிலயே அம்மாவின் திருச்சி எழுச்சிக் கூட்டம் தான்..அது முடிஞ்ச உடன் ஞாயிறு தோறும் வரும் விசுவின் ப்ரோக்ராம். அம்மாவே காலையில தரிசனம் குடுத்தாச்சு அதுக்கு மேல என்ன சிறப்பு நிகழ்ச்சிகள்ன்னு நினைச்சிட்டாங்க போல.
*****************
எந்திரன், ரன்தீவ் ன்னு "பிரச்சனைகள்" வந்ததுல எல்லாரும் காமன்-வெல்த் விளையாட்டு ஊழலை மறந்தாச்சு.  ஆனாலும் நம்ம ஊரு மீடியா எல்லாம் எத்தை தின்றால் பித்தம் தெளியும்ன்னு அலைஞ்சிட்டுத் தான் இருக்காங்க போல. நல்லா பொழுதுபோக்கு அவங்களுக்கு. பேசாம பிசிசிஐ டெய்லி ஒரு மேட்ச் வச்சிட்டா இந்த பிரச்னையே இல்லை..எல்லாரும் அடுத்த நாள் சேவாக்கையும் மறந்திட்டு செஞ்சுரியையும் மறந்திட்டு அவங்க வேலையப்  பார்க்கப்  போயிருவாங்க. இப்படி 2, 3 நாட்கள் கேப் விட்டு, இப்ப பாருங்க. 10 வருஷத்துக்கு முன்னாடி அழுகுணி ஆட்டம் ஆடினவன், 20 வருஷத்துக்கு முன்னாடி டீம் உள்ளயே பாலிடிக்ஸ் பண்ணினவன்னு எல்லாரும் ஒரு மைக் பிடிச்சிக்கிட்டு புத்தருக்கு பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி பேட்டி குடுக்கிறாங்க....முடியலை....
*****************
 நான் ஸ்கூல் படிக்கும்போது கும்பகோணத்துல 6 வருடம் இருந்தோம். அப்ப காவிரிக் கரையில ஆடிப் பெருக்கு கொண்டாடியது இன்னும் நினைவில் இருக்குது. பெங்களூர், அமெரிக்கான்னு வந்த பிறகு ஆடிப் பெருக்கு எல்லாம் மறந்தே போயிருச்சு? இந்த வருடம் அப்பா அம்மாவும் வந்திருப்பதால் ஒரு உத்வேகத்துடன் 10 வகை சாதங்களுடன்  பக்கத்துல இருக்கிற ஏரிக்கரைக்கு போய்ட்டு வந்தோம். ஒரு படம் இங்கே!


*****************
புதுசா ஜோஸ் ஆலுக்காஸ் கடையின் விளம்பரத்துல விஜய் வர்றாரு. கார்ல வந்து இறங்கும்போது கருப்பு பூனை (?) படை, இவரை விட வயசானவரு இவரு கால்-ல விழுந்து கும்பிடுறதுன்னு..ஸ்..ஸ்..அப்பா..3 மணி நேர படமா இருந்தாலும் 30 நொடி விளம்பரமா இருந்தாலும் இந்த பில்ட்-அப்பு இருக்கே......பார்த்து மகிழ்ந்துக்கோங்க!! இத்தனைக்கும் ஒரு மொக்கை விளம்பரமா இருக்குது இது!

*****************
கூடிய விரைவில் இன்ப சுற்றுலா புகைப்படங்களுடன் மீண்டும் சந்திப்போம்!

Friday, July 30, 2010

அமெரிக்க ஜோக்குகள்!!

அமெரிக்காவில் ஒரு முடிதிருத்தும் கடைக்கு ஒரு பூக்காரர் சென்றார். வேலை முடிந்ததும் எவ்வளவு என்று கேட்க, அதற்கு முடிதிருத்துபவர், "நான் சேவை செய்கிறேன்..எதற்கும் பணம் கொடுக்க வேண்டாம்" என்று கூறுகிறார். பூக்காரருக்கு ஆச்சரியம். நன்றி தெரிவித்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அடுத்த நாள் முடிதிருத்துபவர் கடையைத் திறக்க வரும்போது வாசலில் அவருக்கு ஒரு நன்றி கார்டும் பெரிய பூங்கொத்தும் இருக்கிறது. இரண்டாவது நாள் அதே கடைக்கு ஒரு சாக்லேட் கடை உரிமையாளர் வருகிறார், அவரும் ஆச்சரியப்பட்டுத்  திரும்புகிறார். மூன்றாம் நாள் முடிதிருத்துபவர் கடையைத் திறக்க வரும்போது வாசலில் அவருக்கு ஒரு நன்றி கார்டும் பெரிய சாக்லேட் பாக்சும் இருக்கிறது. மூன்றாம் நாள் கடைக்கு ஒரு இந்திய சாப்ட்வேர் காரர் வருகிறார், வேலை முடிந்ததும் அவரும் ஆச்சரியப் பட்டு திரும்புகிறார். அதற்கு அடுத்த நாள் கடையை திறக்க வரும்போது முடிதிருத்துபவரால் கடைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை. அந்த ஊரில் இருக்கும் அத்தனை இந்திய சாப்ட்வேர் மக்களும் கடை வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்!
********************************
அமெரிக்காவில் மட்டும் காணக் கிடைப்பவை: 
1. பிட்ஸா டெலிவரிக்காரன் ஆம்புலன்சை விட வேகமாக வீட்டுக்கு  வந்து விடுவான்.
2.  டபுள் சீஸ் பர்கர், லார்ஜ் fry, சாக்லேட் குக்கி உடன் diet கோக் ஆர்டர் செய்பவர்கள்!
3. $ 30000 கொடுத்து வாங்கிய காரை காராஜில் நிறுத்தாமல் வெளியே நிறுத்தி விட்டு உடைந்த பொருட்களைப் போட்டு கராஜை மூடி வைப்பவர்கள்!

********************************
ஒரு நாள் சொர்க்க வாசலில் பெரிய வரிசை.  முதலில் ஒரு சர்தார்ஜி வருகிறார். அவரைப் பார்த்த செயின்ட் பீட்டர், "உன்னைப் பற்றி சொல்லு" என்கிறார். உடனே சர்தார்ஜி, " என் பெயர் குர்தாஸ், நியூயார்க் சிட்டியில்  டாக்ஸி டிரைவராக வேலை செய்தேன்" என்கிறார். செயின்ட் பீட்டரும் தனது லிஸ்டை சரி பார்த்து விட்டு, "சரி இந்த பட்டுத்துணி உடுத்திக் கொண்டு தங்க வாகனத்தில் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்று கூறிகிறார். அடுத்து வரிசையில் ஒரு பாதிரியார். "என் பெயர் ஜோசப், பல இடங்களில் பாதிரியாராக சேவை செய்தவன்" என்கிறார். செயின்ட் பீட்டரும் தனது லிஸ்டை சரி பார்த்துவிட்டு, "இந்த சாதாரண துணியை உடுத்திக் கொண்டு நடந்து சொர்க்கத்துக்குள் செல்லலாம்" என்கிறார். இதைப் பார்த்ததும் செயின்ட் பீட்டரின் உதவியாளருக்கு சந்தேகம் வந்து அவரிடம் எதற்கு இந்த வித்தியாசம் என்று கேட்கிறார். அதற்கு செயின்ட் பீட்டர், "அவரவர் செய்த வேலையைப் பொறுத்து தான் இங்கு பரிசு, அந்த பாதிரியார் பிரசங்கம் செய்த போது முக்கால் வாசி பேரு தூங்கிட்டாங்க. ஆனால், குர்தாஸ் எப்போதெல்லாம் நியூயார்க் சிட்டியில் கார் ஓட்டினாரோ அப்போதெல்லம் கார் உள்ளே இருந்தவர்கள், வெளியே நடந்தவர்கள் எல்லாரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடவுளை மட்டும் நினைத்தார்கள்" என்றார்! 

********************************
"பஞ்ச் பஞ்சாமிர்தம்":
சிகரெட்: காகிதத்தில் சுத்தப்பட்ட புகையிலையின் ஒரு முனையில் நெருப்பு, மறுமுனையில் முட்டாள்.
********************************

Tuesday, July 27, 2010

எந்திரனும் வோல்வேரினும்!!

எந்திரன் படப் பாடல்கள் இன்னும் சில நாட்களில் வரவிருப்பதும் அந்தப் படப் போஸ்டரும் தான் இன்றைய talk of the town (கோடம்பாக்கம் டவுன்?) போல இருக்கிறது. போஸ்டரில் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்த உடன் எனக்கு X-men Wolverin படத்தின் Hugh Jackman கெட்-அப் தான் சட்டென்று ஞாபகத்துக்கு வருது!! என்ன ரஜினிக்கு தலைல கொஞ்சம் காரக் கொழம்பு எக்ஸ்ட்ரா கொட்டிருக்காங்களோ?? இரண்டு படங்களும் இங்கே!!

Thursday, July 22, 2010

அமெரிக்காவைப் பிடித்து ஆட்டும் புது பேஷன் - ஸில்லி பேண்ட்ஸ் !!


அமெரிக்காவில் இருக்கும் பெற்றோர்கள் யாரும் இந்த "வியாதி"யில் இருந்து தப்பித்து இருக்க முடியாது - அது தான் Silly Bandz!! (இங்கே சென்று பார்க்கலாம்!). 2, 3 வயது குழந்தைகளில் இருந்து டீன்-ஏஜர்கள் வரை அனைவரது கைகளிலும் மாரியாத்தா காப்பு கட்டியது போல இப்போது ஸில்லி பேன்ட்ஸ்.  ஒண்ணும் புது விஷயம் எல்லாம் இல்லை. சாதாரண சிலிகான் ரப்பர் பேண்ட்-ஐத் தான் வெவ்வேறு டிசைன்களில் செய்து விக்கிறார்கள். விலங்குகள், கடல் உயிரினங்கள், ABCD மாதிரி டிசைன், சதுரம், முக்கோணம் போன்ற டிசைன்கள் என்று பலவிதம். அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு சென்ற ஒரு வியாபாரக் குழு அங்கே இதே போல  ரப்பர் பேண்ட்-ஐப் பார்த்து இந்த ஐடியா நல்லா இருக்கே என்று இங்கு வந்து செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பெரிய பிசினஸ் பிளான் எல்லாம் எதுவுமில்லாமல் சில கடைகளில் 2008 இல் கிடைக்க ஆரம்பித்தது சென்ற வருட இறுதியில் அமெரிக்காவில் அதிகமாக விற்கும் பொருட்களில் ஒன்றாக ஆகிவிட்டது. திடீர் என்று எதிர்பாராமல் ஏகப்பட்ட டிமாண்டு! பள்ளிகளில் குழந்தைகள் வெவ்வேறு டிசைன்களை மாற்றிக்கொள்வதும், அதே போல்  டிசைன் தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிப்பதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. இதனால் வெறுத்து போன சில பள்ளிகள் silly bandz-க்கு தடையே விதித்து விட்டன. இன்னும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைகளைச் செய்யும் குழந்தைகளுக்கு இதையே பரிசாகக் குடுக்க ஆரம்பித்தனர். இன்னும் silly bandz பற்றிய விவாதங்கள் பள்ளிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போ இங்க கோடை விடுமுறைங்கறதால கொஞ்சம் பள்ளிகளுக்கு மூச்சு விட சந்தர்ப்பம். அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கும்போது மீண்டும் இந்த விஷயம் செய்திகளில் அடிபடும்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த கம்பெனி ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யவில்லையாம். அனைத்து விளம்பரங்களும் சோசியல் நெட்வொர்க் தளங்களான facebook, twitter வழியாக மட்டுமே செய்யப்பட்டிருகின்றன. எதேச்சையாக ஆரம்பித்த ஒரு சிறிய ஐடியா இன்றைக்கு அந்த கம்பெனிக்கு மில்லியன்களை அள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது! 24 பேண்ட்கள் கொண்ட ஒரு பாக்கெட் விலை இங்கே 5 டாலர்கள், விலை அதிகம் தான். ஸில்லி என்று பெயர் வைத்தது இதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அப்பா அம்மாக்களைக் குறித்து தானோ? நாங்களும் எங்க வீட்டுல பணம் செலவு பண்ணி இந்த silly bandz காய்ச்சலில் இருக்கிறோம் - அந்த ஆதங்கத்தில் தோன்றிய பதிவு! மேலும், இன்றைய CNN செய்திகளில் இதைப் பற்றிய ஒரு செய்தியைப் பார்த்த உடன் எழுதியது. அந்த CNN வீடியோ பார்க்க நினைப்பவர்கள் இங்கே செல்லவும்!

Tuesday, July 20, 2010

The Girl with the Dragon Tattoo - சினிமா விமர்சனம் !

Stieg Larsson:  2004 இல் தனது 50 ஆவது வயதில் இறந்து போன ஸ்வீடன் நாட்டு எழுத்தாளர். இவர் எழுதி வைத்துச் சென்ற 3 க்ரைம் நாவல்கள் தான் கடந்த சில வருடங்களாக உலகில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் புத்தகங்கள். Girl with the Dragon Tattoo (2005), Girl who played with Fire (2006), Girl who kicked the Hornet's Nest (2007) ஆகியவை தான் அந்தப்  புத்தகங்கள்.  இன்றும் New York Times டாப் 10 புத்தக வரிசையில் இந்த 3 புத்தகங்களும் இருக்கின்றன! இதில் முதல் புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.  க்ரைம் கதை - கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பிசினஸ் ஆட்களின் ஏமாற்று வேலைகள், நிறைய சஸ்பென்ஸ், கொலைகள், கொஞ்சமே கொஞ்சம் செக்ஸ் என்று நல்ல கலவை. கதையில் ஆசிரியரின் நடையும், தொய்வில்லாமல் கொண்டு சென்ற விதமும் மிகவும் கவர்ந்தன. சில வருடங்களாக க்ரைம் கதைகளில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லாமல் இருந்தும் இந்தக் கதை ஊன்றி படிக்கத் தூண்டியது. புத்தகத்தைக் கிட்டத்தட்ட முடிக்கும் சமயத்தில் இது திரைப்படமாக இங்கு வெளி வருகிறது என்று தெரிந்த உடன் கதையைப் படிப்பதை நிறுத்தி விட்டேன் - முடிவு சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும் என்று. 2009 வருடத்தில் இந்த 3 புத்தகங்களுமே திரைப்படம் ஆக்கப்பட்டு  ஸ்வீடன் மொழியில் வந்து விட்டன. அமெரிக்காவில் முதல் படம் மார்ச் மாதமும் இரண்டாவது படம் போன வாரமும் வந்துள்ளது.

சென்ற வாரம் முதல் படம் -  The Girl with the Dragon Tattoo படத்தை மிக்க ஆர்வத்துடன் DVD-இல் பார்த்தேன். புத்தகத்தை படித்து விட்டு படம் பார்க்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று ஏற்கனவே Harry Potter இல் பட்ட அனுபவம் மனதில் தோன்றி மறைந்தாலும், சரி, இது ஹாலிவுட் காரங்க கையுல மாட்டலையே ஸ்வீடன்காரங்க ஒரு வேளை நல்ல எடுத்திருக்கலாமேன்னு ஒரு நப்பாசை இருந்தது. ஆனா, படம் பார்த்த உடன்  ஏமாற்றம் தான் மிஞ்சியது. இப்போது படம் பார்த்து சில நாட்கள் ஆகிவிட்ட பிறகு, இது மோசமான படம் இல்லை என்று தான் தோணுது. இந்தப் புத்தகத்தை நீங்க படிக்கவில்லையா - கண்டிப்பாகப் படத்தைப் பார்க்கலாம். புத்தகத்தைப் படித்தவர்கள் அல்லது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் - படத்தை விட்டுவிடுங்கள். ஒரு சின்ன கதைச்சுருக்கம் கீழே!

Blomkvist  என்ற பத்திரிக்கைகாரரும் Lisbeth என்ற கம்ப்யூட்டர் ஹாக்கர்/துப்பறியும் பெண்ணும் தான் கதையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.  Blomkvist ஐ ஒரு பெரிய பிசினஸ் குடும்பம் (Vanger group) வேலைக்கு அமர்த்துகிறது - 40 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன அவர்களது குடும்பத்து டீன்-ஏஜ் பெண்ணைக் கண்டுபிடிக்க சொல்லி. சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டதால் எந்த க்ளூ-வும் கிடைக்காமல் திணறும் Blomkvist-க்கு எதிர்பாராத விதமாக Lisbeth-இன் அறிமுகம் கிடைக்கிறது. Lisbeth ஒரு வினோதமான பெண். அவளைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரிவதில்லை. இவர்கள் இருவரும் Vanger குடும்பத்திற்கு சொந்தமான தனித்தீவில் தங்களது துப்பறியும் வேலையை ஆரம்பிக்கிறார்கள் - எதிர்பாராத திருப்பங்கள், திடுக்கிட வைக்கும் சம்பவங்கள் என்று கதை வேகமாக செல்கிறது. முடிவில் காணமல் போன பெண் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற கேள்விக்குக் கிடைக்கும் விடையுடன் கதை முடிகிறது.

ஸ்வீடன் மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு ஆங்கில ஒலியும், ஆங்கில சப்-டைட்டிலும் DVD-இல் இருக்கிறது. படம் நம்மூரு படம் போல 2:30 மணி நேரம் செல்கிறது. கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்து எடுக்கப்பட்டு 100 மில்லியனுக்கு மேல் அள்ளிக்கொண்டிருக்கும் படம். R  - ரேட்டிங் குடுக்கப்பட்டப் படம், எனவே குழந்தைகள் இல்லாமல் பார்ப்பது நல்லது!

Wednesday, July 14, 2010

சிரிப்பா சிரிக்குது!

அண்ணே, இந்த கவர் உள்ளே தான் உங்க செல்போன்-ஐ மறைச்சு வச்சிருக்கிறேன். வரிசையா போன் மேல போன் வந்து தொந்தரவு தாங்க முடியலை. டேய்...அடக்கி வாசிடா. ஆரம்பத்திலயே போட்டுக் குடுத்திராதேடா!





என்னை ஆளை விட்டிருங்கப்பா!! இலங்கைல மொக்கை பிட்ச் போட்டு வந்தவன் போனவன் எல்லாம் 100 போடுவான் - அதுக்கு நான் முக்கி முக்கி 2 நாள் வரிசையா பந்து எறியணுமா? உலகே மாயம், எனக்கு தோள்ல காயம்!




ஒரு வேளை ரெண்டு பேட் வச்சு விளையாடினா ஷார்ட்-பிட்ச் பந்தை நேரா விளையாட முடியுமோ? எதுக்கும் ட்ரை பண்ணிப் பார்ப்போமே!! அட்லீஸ்ட், ஷார்ட்-பிட்ச் பந்தை அடிக்க முடியாட்டியும், ஒரு பேட் வச்சு யுவராஜ் காலை உடைச்சிட்டா போதும். நமக்கு சான்ஸ்!



டேய், அங்கே ரைனா வேற 2 மட்டையைத் தூக்கிட்டு வர்றான்..ஒழுங்கா விளையாடிரு! பேசாம பாஸ்ட் பௌலர் ஆயிருக்கலாம்..அங்கே தான் எவன் வந்தாலும் டீம்ல இடம் கிடைக்குது. ஹ்ம்ம்.

Thursday, July 8, 2010

நன்றி, முரளி!

டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 15-20 வருடங்களில் உலகின் முன்னணி வரிசையில் இருந்த முரளி, ஷேன் வார்னே, கும்ப்ளே ஆகிய 3 சுழல்பந்து வீச்சாளர்களும் சாதித்தவை மிக அதிகம். மூவருமே 600 விக்கெட்களுக்கு மேல் எடுத்தவர்கள் - முரளி 792. இவர்களுக்கு அடுத்த படியாக அதிக விக்கெட் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (355) தான். இதில் இருந்தே உலக கிரிக்கெட்டில் இந்த  மூவரின் ஆதிக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம். பந்து வீசும்போது பிதுங்கி வெளியே வருவது போன்ற கண்கள், பந்து அடிக்கப்பட்டாலும், விக்கெட் எடுத்தாலும் உதடுகளில் தொங்கும் சிரிப்பு போன்றவை முரளியின் அடையாளங்கள். பந்து வீச்சாளர்களில் அதிக பிரச்சனைகளைச் சந்தித்தவரும் கூட. இருந்தாலும், ஒரு நல்ல விளையாட்டு வீரர் ஓய்வு பெறப்போவது கிரிக்கெட் உலகிற்கு இழப்பே!

Tuesday, July 6, 2010

கூட்டாஞ்சோறு - 3

அமெரிக்காவில சுதந்திர தின விடுமுறை 3 நாட்கள் முடிந்து எல்லாரும் ரொம்ப டயர்ட்-ஆ ஆபீஸ்ல ஓய்வெடுக்க போயிருப்போம்! இந்த இடைப்பட்ட காலத்துல நடந்த விஷயங்களின் தொகுப்பு இது!

வருத்தம்: கண்டிப்பாக செல்லவேண்டும் என்று நினைத்தும் கடைசி நேரத்தில் சில சொந்தக் காரணங்களால் கனக்டிகட் FETNA விழாவிற்கு செல்ல இயலாதது வருத்தம் தான். தொலைபேசியில்  அழைத்த பதிவர் சின்னப்பையனுக்கு நன்றி. பழமைபேசியின் பதிவுகளில் இருந்து விவரங்கள் தெரிந்து கொண்டேன். சிறப்பான ஒரு விழாவை நடத்தியதற்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.  
வியப்பு: ஜூன் மாதத்தில் வரிசையாக 3 உலகப் போட்டிகளில் பட்டம் வென்ற சாய்னா நேஹ்வல்! உலக பாட்மிண்டன் தர வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் - முதலாவது இடமும் சாத்தியமே. பிரகாஷ் படுகோனுக்கு பிறகு பாட்மிண்டன் ஆட்டத்தில் இந்தியாவில் மிகவும் சாதித்தவர். எப்படி இவரை இதுவரை நம்ம ஊரு விளம்பர, மாடலிங் உலகம் விட்டுவைத்தது என்று வியந்து கொண்டிருக்கும்போது இன்று காலை நியூஸ் - Saina Nehwal shuttles on the ramp for designer Pallavi Jaipur என்று - சங்கு ஊதிரதீங்கப்பூ!
சிரிப்பு:  கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தமிழ் தொல்லைக்காட்சி நிகழ்சிகளைப் பார்க்கிறேன் - வீட்டில் கொடுத்திருக்கும் கலைஞர், ஜெயா டிவி வழியாக. சில நாட்களுக்கு முன்னாடி ஒரே நாளில்  கலைஞர் செய்திகள்  மற்றும் ஜெயா செய்திகள் பார்த்தேன். முதலில் கலைஞர் - தலைப்புச் செய்தி (வேற என்ன செம்மொழி மாநாடு தான்!) முடிந்ததும் அடுத்த செய்தி - உயர்நீதி மன்றங்களில் தமிழில் வாதாட அனுமதி. வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி! 30 நிமிடங்கள் கழித்து ஜெயாவில் தலைப்புச் செய்தி - தமிழ்நாட்டில் தமிழில் வாதாட முடியாதா - வழக்கறிஞர்கள் போராட்டம். அடுத்த 10 நிமிடத்திற்கு வெவ்வேறு ஊர்களில் நடந்த "போராட்டங்கள்" பற்றிய காட்சிகளும் இருந்தது. நம்மூரு மக்கள் ரொம்ப பாவம் தான்! இதுக்காகத் தான் அவங்களும் செய்திகள் எல்லாம் பார்க்காம சீரியல்-ல மூழ்கிராங்களோ??
குழப்பம் மற்றும் கொலைவெறி: நம்மூருலயும் ராவணன் (ஹிந்தியில) தியேட்டர்ல போடுறாங்களேன்னு நானும் இன்னொரு நண்பரும் இரவு 10 மணிக்காட்சி சென்றோம் ஒரு வாரநாளில். 500 - 600 பேரு அமரக்கூடிய அரங்கில் நானும் அவரும் மட்டும் தான்!! எந்த இடத்தில் உட்கார்ந்தா படம் நல்லாத் தெரியும்னு கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது. படம் நடந்திட்டு இருக்கும்போது தியேட்டர்காரன் ஒருத்தன் வந்து எட்டிப் பார்த்திட்டு வேற போனான். வெளிய நின்னு எல்லாரும் நம்மளைப் பத்தி சொல்லி சொல்லி சிரிச்சிருப்பான்களோ? படம் - கொலைவெறி! முதல் வாரத்துலயே யாரும் பார்க்காத படத்தை விடாப்பிடியாக 2 வாரங்கள், தினமும் 4 காட்சிகள்ன்னு ரிலையன்ஸ் ஓட்டினாங்க. காந்தி கணக்கு காட்டத்தான் இந்த படமா?
 ஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடி!: ஒரு வழியா தோனிக்கு கல்யாணம் ஆயிருச்சாம். முந்தின நாள் நிச்சயதார்த்தம்-ன்னு செய்தி. திடீர்னு அடுத்த நாள் கல்யாணமாம். லக்ஷ்மி ராய், தீபிகா, அசின் மாதிரி ஆட்கள் எல்லாம் இனிமேல் சினிமால கவனத்தை செலுத்தி நமக்கும் நிறைய கலைப்படைப்புகள் கிடைக்கும். 

Tuesday, June 22, 2010

Traffic - நம்ம ஊர் ஸ்டைல்!

மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய மற்றும் சீன நகரங்களில் டிராபிக் என்பது மிகப் பெரிய (சோகமான?) விஷயம். தினம் தினம் நடக்கும் விபத்துக்கள், எரிச்சல்கள், டென்ஷன்கள் எல்லாவற்றையும் அனுபவித்தவர்கள்/அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள் நம்மில் பலர் இருப்போம். அதற்கு எடுத்துக்காட்டாக  மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு YouTube வீடியோக்கள்! இது இரண்டுமே சில வருடங்களுக்கு முன் உள்ளது போல. அப்பவே இப்படின்னா.....!!



Friday, June 18, 2010

இலவச கிரிக்கெட் ஒளிபரப்பு - மீண்டும்!

நாளைக் (சனிக்கிழமை) காலை அமெரிக்க நேரம் 5 மணிக்கு (EST) இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன ஆசியக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. இந்தத் தொடர் முழுவதும் அமெரிக்காவில் ESPN வலையில் இலவசமாக ஒளிபரப்பப் படுகிறது. cricinfo வலையில் இருந்தும் ESPN செல்லலாம். இந்திய-பாகிஸ்தான் போட்டிகள் என்றும்  ஸ்பெஷல் தான்!!

Wednesday, June 9, 2010

கிரிக்கெட்டும் பேஸ்பாலும்!!

எல்லாரும் 2010 உலகக் கோப்பை கால்பந்து பற்றிய காய்ச்சல்ல தகிச்சுக்கிட்டு இருக்கும்போது அதைக் கொஞ்சம் மட்டுப்படுத்த மத்த விளையாட்டுகளைப் பற்றி  ஒரு பதிவு!

கிரிக்கெட்டும் பேஸ்பாலும் ஒண்ணுவிட்ட சகோதரர்கள் மாதிரின்னு இரண்டு விளையாட்டையும் பார்த்த எல்லாருக்கும் தோணியிருக்கும். அது என்னவோ இந்தியால கிரிக்கெட் பிரபலம் அடைஞ்ச அளவு பேஸ்பால் ஆகலை. சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும்போது (எல்லாரும் சின்ன வயசுல தானே ஸ்கூல் படிப்பாங்கன்னுக் கேட்கக்கூடாது!) ஸாப்ட் பால்ன்னு ஒரு குத்துமதிப்பா கிரிக்கெட்டுக்கும் பேஸ்பாலுக்கும் இடைப்பட்ட ஒரு விளையாட்டை ஆடியது நினைவில் உள்ளது. ஆனாலும் கிரிக்கெட் தான் என்னைக்கும் முதல் சாய்ஸ்!

இந்தியாவில் இருந்து இங்க அமெரிக்கா வந்த நிறைய பேருக்கு பேஸ்பால் (MLB) மற்றும் பாஸ்கெட்பால் (NBA) தான் பிடிக்கும். இந்த ஊரு புட்பால், ஐஸ் ஹாக்கி போன்ற விளையாட்டுகள்  ரெண்டாம் பட்சம் தான்னு தோணுது. இந்த பேஸ்பால் விளையாட்டுக்கு கிரிக்கெட் உடன் நிறைய தொடர்பு உண்டு. கிரிக்கெட் எப்படி இங்கிலாந்துல இருந்து மற்ற இடங்களுக்கு பரவியதுன்னு சொல்லுறாங்களோ அதே போல பேஸ்பாலும் அங்கே இருந்து தான் வந்ததுனு அவனுங்க சொல்ல, அமெரிக்காக்காரங்களோ இல்லை, பல இடங்களில் அதே போல விளையாட்டு இருந்தாலும் பேஸ்பால் விளையாடும் முறை அமெரிக்காவில் உருவானது தான்னு சொல்லிட்டு இருந்தாங்க. 1755 ல ஒரு இங்கிலிஷ்காரர் பேஸ்பால் அப்படிங்கற வார்த்தையையே தனது டைரில எழுதியதை வச்சு இப்ப அது தான் பழமை வாய்ந்த பேஸ்பால் குறிப்புன்னு எல்லாரும் ஒத்துகிட்டாங்க. லண்டன்-ல இருக்கிற MCC அருங்காட்சியகத்துல இதைப் பற்றி ஒரு exhibition இப்போது நடந்திட்டு இருக்குதாம். பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் போய் ஒரு எட்டு பார்த்திட்டு வந்து சொல்லுங்க.

மத்தபடி கிரிக்கெட்டுக்கும் பேஸ்பாலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னன்னா, கிரிக்கெட்டுல 11 பேரு, அங்கே 9. பந்தை எரியுறது, மட்டையைக் கொண்டு அடிக்கிறது, பிடிச்சா ஆட்டம் காலின்னு நிறைய ஒற்றுமைகள் உண்டு. நாம சிக்ஸர்ன்னு சொல்லுறதை இங்க ஹோம் ரன்னு சொல்லுவாங்க. நாம 2 innings (இல்லாட்டி 1) ல முடிக்கிற விளையாட்டை இவங்க 9 innings- ல முடிப்பாங்க. நம்ம ஊரு IPL மாதிரி இங்க MLB (Major League Baseball). ஏப்ரல் மாசம் கொஞ்சம் குளிர் குறைய ஆரம்பிச்ச உடன் ஆரம்பிக்கிற சீசன் அக்டோபர் வரை போகும். MLB ல நேஷனல் லீக், அமெரிக்கன் லீக் என்று ரெண்டு பிரிவு. ஒண்ணுல 14 அணிகள், இன்னொண்ணுல 16. ரெண்டு பிரிவுலயும் 100 க்கும் மேற்பட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும். அப்புறம் இரண்டு பிரிவுலயும் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு இடைய உலக சாம்பியன் போட்டிகள் நடக்கும். "உலக" சாம்பியன்ன்னு சொன்னாலும் பங்கேற்கும்  30 அணிகள்ள 29 அமெரிக்காவைச் சேர்ந்ததுதான். (ஹி..ஹி..இன்னொன்னு பக்கத்துக்கு ஊரு டொரோண்டோலர்ந்து!). கிரிக்கெட் எப்படி ஒரு சில நாடுகளில் மட்டும் தான் பிரபலமோ அதே போல பேஸ்பாலும் அமெரிக்கா, கனடாவை விட்டா கியூபா, ஜப்பான், தைவான் போன்ற சில நாடுகளில் மட்டுமே பிரபலம்.

2010 MLB சீசன் ஆரம்பிச்சு தினமும் போட்டிகள் களைகட்டுது. என்ன, தினமும் அதைப் பார்க்கத் தான் நேரம் கிடைக்க மாட்டேங்குது. இதுக்கு நடுவுல NBA இறுதிப் போட்டிகள் வேற (லேகேர்ஸ் - செல்டிக்ஸ்) நடந்திட்டு இருக்குது. அதுக்குள்ள 2010 கால்பந்து உலகக்கோப்பை வேற 2 நாள்-ல ஆரம்பிக்கிறாங்களாம். ஒரு மனுஷனுக்கு எவ்வளவு பிரஷர் பாருங்க. நல்ல வேளை, ஜிம்பாப்வே கூட தோத்து போய் இந்திய கிரிக்கெட் அணி சீக்கிரம் வூட்டுக்கு திரும்பியதில் அந்த பக்கம் கொஞ்சம் ரிலீப்! வாழ்க!! இப்ப, இந்த பேஸ்பால் மற்றும் கிரிக்கெட் பத்தி எல்லாம் தெரிஞ்சு என்ன ஆகப்போகுதுன்னு கேட்கிறவங்க...ஹி ஹி...கம்ப்யூட்டர்-ஐ மூடிட்டுப் போய் புள்ளைங்களைப் படிக்க வையுங்க! :-)

Wednesday, June 2, 2010

தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடல்!!

கலைஞரின் எழுத்தில், A. R. ரஹ்மான் இசையில், கவுதம் மேனன் இயக்கத்தில் தமிழ் 
செம்மொழி மாநாட்டுப் பாடல் - ஒலி/ஒளி!! 

Sunday, May 9, 2010

Friday, April 30, 2010

Amreeka (2009) - விமர்சனம்!!

இந்த வார இறுதியுல ஒரு feel good factor படம் பார்க்கணும்னு ஆசைப் படுறீங்களா? கண்டிப்பா இந்த அம்ரீகா படத்தைப் பாருங்க. முனா (Muna) என்ற பெண்ணும் அவரது டீன்-ஏஜ் மகனும் (Fadi) பாலஸ்தீனத்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து எப்படி இங்கு வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள் என்பது தான் கதை. விவாகரத்து, ஒரே மாதிரியான வேலை, தினமும் வேலைக்கும் வீட்டிற்க்கும் இடையே செல்வதற்கே இஸ்ரேலிய ராணுவத்தின் கெடுபிடிகள் என்று மன உளைச்சல்களில் இருக்கும் முனாவிற்கு திடீர் என்று அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. தாய், சகோதரனை எல்லாம் விட்டு விட்டு  அமெரிக்கா செல்ல வேண்டுமா என்று  நினைப்பு ஒரு புறம், தனது மகனுக்கு பாலஸ்தீனிய யுத்த பூமியில் எதுவும் நடந்துவிடுமோ என்ற பதைபதைப்பு என்று இருக்கும்போது அவரது மகன் பிடிவாதமாக அமெரிக்கா செல்லுவோம் என்று கூற ஆரம்பிக்கிறது அவர்களது பயணம்.

அமெரிக்காவில் வந்து இறங்கிய உடனேயே பிரச்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வடிவில் வருகிறது. சிகாகோவிற்கு அருகில் இருக்கும் முனாவின் சகோதரி குடும்பத்துடன் தங்குகிறார்கள். முதல் முதல் நாம் வெளியூரோ, வெளி நாட்டிற்கோ செல்லும் போது நமக்கு ஏற்படும் அனைத்து சங்கடங்களும் இவர்களுக்கும் ஏற்படுகிறது. அதுவும் Fadi க்கு பள்ளியில் ஏற்படும் தொந்தரவுகள் அதிகம். இதை எல்லாம் எதிர்கொண்டு எப்படி வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் கதை. கதைப் படிப்பதற்கு மிக எளியதாக தோன்றினாலும் படத்தை தூக்கிப் பிடிக்கும் விஷயங்கள் - படத்தில் யாருமே கெட்டவர்கள் இல்லை, அதை விட பெரிய விஷயம், முனாவின் கேரக்டர் செதுக்கப் பட்டிருக்கும் விதம். மிக மிக பாசிடிவ் ஆக எல்லாப் பிரச்னைகளையும் சமாளிப்பதாகட்டும், வெகுளித்தனமாக அமெரிக்காவில் நடந்து கொள்வதாகட்டும் நம்மைக் கட்டிப் போடும் பாத்திரம்.

நம்ம ஊரு கதாநாயகிகளிடம் வெகுளித்தனமாகன்னு சொல்லிற கூடாது..எல்லாம் அரை லூசு மாதிரி பேசிகிட்டு (டிரஸ்சை மட்டும் கிழிக்கிறது கிடையாது? அதைத் தான் பாட்டுக் காட்சிகளில்  கிழிச்சு விட்டுக்குராங்களே!!) திரியுமே..அது போல இல்லாம, வெகுளித்தனத்தையும் அடக்கி வாசிச்சிருக்கும் நடிப்பு. அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டர்வர்கள் எதிர்கொள்ளும் கலாசாரப் பாகுபாடுகள், அராபிய மக்கள் இங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்ற சீரியஸ் ஆன விஷயங்களை எல்லாம் மெல்லிய நகைச்சுவையோடு யாரையும் குற்றம் சாட்டாமல் எடுத்திருக்கும் விதம் தான் இந்தப் படத்திற்கு feel good factor! Netflix Instant View ல இப்ப இந்தப் படம் கிடைக்கிறது.
மதிப்பெண்கள்: 85/100

Wednesday, April 21, 2010

அமெரிக்காவில் IPL இலவச ஒளிபரப்பு!

IPL-T20 கிரிக்கெட் போட்டிகள் அரை இறுதி நிலைக்கு வந்துள்ளது. Youtube நிர்வாகத்துடன் இணைந்து IPL போட்டிகளின் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் இங்கு அமெரிக்காவில் நேரடி ஒளி/ஒலிபரப்பு செய்யப் படப்போகிறதாம். http://www.youtube.com/ipl என்ற லிங்கிற்கு சென்று கண்டுகளிக்கவும். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒப்பந்தங்களினால் இதுவரை நடந்து போட்டிகள் Youtube இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இனிமேல்  கிரிக்கெட் ஆர்வலர்கள் கண்டுகளியுங்கள்!. இன்னும் சிறிது நேரத்தில் மும்பை-பெங்களூர் அரை இறுதி ஆட்டம் ஆரம்பம்! (மோடி-தரூர் ஆட்டமும் அரை இறுதில தான் இருக்குது போல!! :-)).

Tuesday, April 20, 2010

அழுகாச்சியா வருது!! ( திரைப்பட விமர்சனங்கள்)

கொஞ்ச காலமா காணாமப் போயிட்டதுக்கு மன்னிக்கவும். சமீபத்துல பார்த்த மூன்று திரைப்பட விமர்சனங்களுடன் மீண்டும் ஆஜர்! மூன்று படத்துக்குமே ஒரு லிங்க் இருக்குதுன்னு தோணியது. அது என்னனு கடைசியில் பார்ப்போம்!
1. Precious (2009) 


இந்த வருட ஆஸ்கார்ல 2 விருதுகளைப் (சிறந்த துணை நடிகை, திரைக்கதை) பெற்ற படம். நியூ யார்க் நகரத்தில் ஆப்ரிக்க-அமெரிக்க இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான Harlem இல் வசிக்கும் Precious Jones என்ற 16 வயது பெண்ணைப் பற்றிய கதை. சிறு வயதிலயே உடல், மனரீதியான கொடுமைகள் எல்லாம் அவளுக்கு நடக்கிறது - அதுவும் பெற்றோர்களிடம் இருந்தே! 16 வயதிலேயே 2 ஆவது முறை கர்ப்பம் அடைகிறாள். ஏற்கனவே ஒரு மனவளர்ச்சி குறைந்த குழந்தை வேறு இருக்கிறது. இந்த இரண்டிற்கும் காரணம் - அவளது அப்பா! அம்மாவிற்கும் தெரிந்தே இந்த கொடுமைகள் நடக்கிறது. தாயும் அவள் பங்குக்கு சித்திரவதை செய்கிறாள். இவள் மீண்டும் கர்ப்பம் என்று தெரிந்ததும் பள்ளியில் இருந்து வேறு ஒரு சீர்திருத்த பள்ளிக்கு மாற்றப் படுகிறாள். அங்கு இருக்கும் ஆசிரியை, சக தோழிகள் உதவியுடன் வாழ்கையை சரி செய்து கல்வியில் முன்னேற நினைக்கும் போது அடுத்த பலத்த அடி. என்ன அது, அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று படத்தைப்  பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். Precious ஆக நடித்திருக்கும் Gabourey Sidibe (அறிமுக படமாம்!), தாயாக நடித்திருக்கும் Mo'Nique இருவரும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள். இளகிய மனசு இல்லாத எல்லாரும் பார்க்க வேண்டிய படம். 
மதிப்பெண்கள்: 80%.
2. Stoning of Soraya M. (2008)


ஈரானில் ஒரு பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமையைப் பற்றிய படம். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 1994 இல் வெளிவந்த புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டு பல திரைப்பட விழாக்களில் பெரிதும் பேசப்பட்ட படம். ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் (ஷரியா) வந்த பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது, முன்னாள் திருடர்கள் எல்லாம் மத குரு ஆகி ஏமாத்துவது என்று பல விஷயங்களை தொட்டுச் செல்லும் படம். சொராயா என்ற 4 குழந்தைகளின் அம்மாவை அவளது கணவன் வெறுத்து துன்புறுத்துகிறான். காரணம் - அவளை ஒழித்து கட்டிவிட்டு ஒரு 14 வயது பெண்ணை மணக்க அவன் போட்டிருக்கும் திட்டம்! லோக்கல் மதகுருவை தன் கைக்குள் போட்டுகொண்டு தன் மனைவி தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டுகிறான். இஸ்லாமிய சட்டம் படி அந்தப் பெண்ணிற்கு மரணதண்டனை, அதுவும் ஊருக்கு நடுவில் கல்லால் அடித்துக் கொல்லுதல், வழங்கப்படுகிறது. அவளுக்கு என்ன நடந்தது என்று படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மைச் சம்பவம் எப்படி வெளி உலகிற்கு தெரிந்தது என்பது ஒரு த்ரில்லர் நாவலுக்கு இணையானது. 
மதிப்பெண்கள்: 85%.
3. அங்காடித் தெரு (2010)
நம்ம ஊரு படம்! வெயில் படம் எடுத்த வசந்த பாலன் மீண்டும் ஒரு முறை தென்தமிழ் நாட்டுல இருக்கும் மக்களில் வாழ்க்கையைப் பற்றி எடுத்திருக்கும் படம். முந்திய இரண்டு படங்களைப் போல இதிலும் பெண்களுக்கு (கூடவே ஆண்கள்!) இழைக்கப்படும் கொடுமைகள் உண்டு!. சமுதாயத்துல பின் தங்கி இருக்கும் சிறுவர்/சிறுமிகளை சென்னைக்கு வேலைக்காக அழைத்து வந்து ரங்கநாதன் தெருவில் இருக்கும் "ஒரு" கடையில் அவர்களைப் படுத்தும் பாடு பற்றியது. மகேஷ், அஞ்சலி மற்றும் பாண்டி அருமையாக நடித்திருக்கிறார்கள். வெகு நாட்களுக்கு பிறகு உண்மை நிகழ்வுகளை வைத்து எடுத்த படம். ஹீரோ ஷூக்கு கீழே கேமரா, 50 பேரை அஞ்சு நிமிஷத்துக்குள்ள ஆசுபத்திரிக்கு அனுப்புற ஹீரோ, ஒரு நாலு தடவை சுவிட்சர்லாந்த், நியுசிலாந்து, ஆஸ்திரேலியா, எகிப்து ன்னு போய் மொக்கைப் பாட்டு எல்லாம் இல்லாம படம் இருந்தாலே நமக்கு பெரிய நிம்மதி கிடைக்குதோ? இப்படி ஒரு நல்ல படம் எடுத்துவிட்டு அதில் தமிழ் சினிமாவிற்கு தேவையான ஜிகினா டிரஸ் கனவு டூயட் எல்லாம் தேவையா? ஹீரோவும் ஹீரோயினும் பூட்டிய கடைக்குள் மாட்டி விட்டார்களே என்று நாம் பதைபதைக்கும் சமயத்தில் கனவு டூயட்! அங்கே தான் படைப்பாளி செத்துப் போய் வியாபாரி தெரிகிறாரோ? இது போன்ற சீரியஸ் சினிமாவில் காமிக் ரிலீப் தேவை தான், அதுக்காக "கேஸ்" ட்ரபுள் தான் கிடைத்ததா?  இது போல ஓட்டைகள் இருந்தாலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 
மதிப்பெண்கள்: 70%


3 படமுமே ஒரு மாதிரி டார்க் தான். ஆனால், அங்காடி தெருவில் தான் ஏகப்பட்ட சோகம். படத்தில் வரும் 1-2 பேரைத் தவிர மத்தவங்க எல்லாரும் கெட்டவங்க, இல்லை வக்கிர புத்தி படைத்தவர்கள். படம் பார்க்கும் போதே அடுத்த சீன்ல பாரு, ஹீரோக்கு கண்ணு போயிரும் என்கிற மாதிரி கமெண்ட் அடிக்க தோணுது..அவ்வளவு சோகம்! மூணு படமுமே சமூகத்தில் மனிதர்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றியது. 3 படத்தையும் ஒரே நாள்ல பார்த்தீங்கன்னா, அடுத்த ஒரு வாரத்துக்கு அழுகாச்சியா வந்துகிட்டே இருக்கும். அந்த அளவுக்கு சோகத்தை தாங்குற தைரியம் இல்லையா, பேசாம இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க..சுறா வருதாம்! (போஸ்டரை பார்த்தே இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன் - பஞ்ச் லைன்ஐ பாருங்க.."சமாதானம் போக நான் புறா இல்லைடா, சுறா!!". ரூம் போட்டு உண்மையிலயே யோசிக்கிறாங்கப்பா!). 

Friday, March 19, 2010

இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு!!

இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு - அப்படின்னு படிச்சிட்டு டென்சன் ஆகாதீங்க..நம்ம கிராமத்து நாயகன், முன்னாள்-MP, ராமராஜன் இன்னமும் படத்துல நடிச்சிட்டு இருக்காருன்னு இன்னைக்கு செய்தில பார்த்து அதிர்ச்சி அடைஞ்ச எனக்கு, அந்த படத்து ஸ்டில்ஸ் பார்த்து தான் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆச்சுது..வாரம் முழுவதும் ஆபீஸ்ல வேலை (??) பார்த்து களைச்சுப் போன எல்லாருக்கும் ஒரு டென்ஷன் ரிலீவர்!